சென்னைக்கு விமானத்தில் பறந்த பள்ளி மாணவர்கள்: தூத்துக்குடி கலெக்டர் வழியனுப்பி வாழ்த்தினார்
தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டியில் உள்ள துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 18 மாணவர்களை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.;
தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ். இவரிடம் கடந்த ஆண்டு மாணவர்கள் தங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. ஆனால் நாங்கள் அதில் ஏற இயலுமா என கேள்வி கணை தொடுத்தனர். எனவே அவர் சுமார் 18 மாணவர்களை தனது செலவில் அழைத்துக்கொண்டு கடந்த வருடம் சென்னைக்கு விமானத்தில் சென்றார்.
இந்த வருடம் தன்னிடம் படித்துவிட்டு சென்ற பழைய மாணவர்கள் நாங்களும் உங்கள் மாணவர்தானே. எங்களுக்கு விமான பயணம் கிடைக்காதா? என்று கேட்க, பழைய மாணவர்கள் 8 பேர் மற்றும் தற்போது படிக்கும் மாணவர்கள் 10 பேர் என 18 மாணவர்களை நேற்று முன்தினம் விமானத்தில் சென்னை அழைத்துச் சென்றார். இவரும் இவருடன் பணியாற்றும் இடைநிலை ஆசிரியை மாரிச்செல்வி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உடன் சென்றனர்.
இந்த வருடம் மாணவர்கள் பயணம் சாதரணமாக இருக்க கூடாது. பயனுள்ளதாகவும் அதே வேளையில் தாமிரபரணி, ஆதிச்சநல்லூர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பயண வடிவம் அமைத்தார். இதனால் ஒரே நாளில் மாணவர்கள் பலநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் சிறப்புரையாற்றி மாணவர்களை வழியனுப்பி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் தெட்சணாமூர்த்தி, தூத்துக்குடி ஊரக வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயசீலா விமானத்தில் ஏறியவுடன் முத்தாலங்குறிச்சி காமராசு, தான் எழுதிய தாமிரபரணி வரலாற்றில் முதல் முதலில் வெளிவருகின்ற நாவலான நீர்மம் குறித்து மாணவர்களிடம் அறிமுகம் செய்தார்.
காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தினை விமானம் சென்றடைந்தது. மாணவர்களை சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர்மணி ஆகியோர் வரவேற்று பேசினார்கள். அதன்பின் மாணவர்கள் மெட்ரோ ரெயிலில் விமான நிலையத்தில் இருந்து நந்தனத்திற்கு பயணம் செய்தனர்.
தொடர்ந்து 10 மணிக்கு அண்ணா நூலகத்தினை பார்வையிட்டனர். அங்கு ஊடகவியலாளரும், பேச்சாளருமான கோபாலகிருஷ்ணன் மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் கோளரங்கத்தினை கண்டு களித்தனர். அங்கு சென்னை இந்துஸ்தான் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் அபிஷ்விக்னேஷ் மாணவர்களுடன் உரையாடினார்.
தொடர்ந்து சென்னை சிப்காட் அலுவலகத்தில் வைத்து, அதன் இயக்குனர் செந்தில்ராஜ் உடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் கன்னிமாரா நூலகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் ஆதிச்சநல்லூர் பொருள்களை மாணவர்கள் பார்வையிட்டனர். காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி மாணவர்களிடம் உரையாடினார்.
தொடர்ந்து தோரணமலை முருகன்கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மாணவர்களை சந்தித்து பயணங்கள் குறித்து உரையாடினார். அதன் பின் முத்துநகர் எக்ஸ்பிரஸில் மாணவர்கள் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மனதை மகிழ வைக்கும் விதமாக விமான பயணத்தினை ஏற்படுத்தி கொடுத்த நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜை கிராம மக்கள் பாராட்டினர். பல்வேறு அமைப்புகளும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் கொரோனா காலத்தில் தனக்கு கிடைத்த சம்பளத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்காக பண்டாரம்பட்டியில் கட்டிடடத்தினை கட்டிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.