12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்துள்ளார்.;

Update:2025-11-22 02:59 IST

கடந்த 2023-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, தளவாய்புரத்தை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 56) என்பவர் 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெரியம்மா, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு, இசக்கியப்பனை கைது செய்தனர். புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertising
Advertising

இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த ராஜகுமாரி (தற்போது மூலக்கரைப்பட்டி காவல் நிலையம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்