ஆபாச படம் காண்பித்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியை உட்பட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் சிலர் பெற்றோருடன் வந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

மாணவிகள் தரப்பில் அளித்த அந்த புகாரில், நாங்கள் படித்துவரும் பள்ளியில் மாணவிகளுக்கு பல்வேறு கொடுமைகள் நடக்கின்றன. குறிப்பாக எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஜெயராம் என்பவர் மாணவிகளை தொட்டு, தொட்டு பேசுகிறார். சில்மிஷம் செய்கிறார். அவரால், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் ஆபாச வீடியோக்களை மாணவிகளிடம் காண்பித்தும் பாலியல் தொந்தரவு செய்கிறார். தனியாக வரவழைத்து சீண்டலில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது செயல்பாடுகள் குறித்து, தலைமை ஆசிரியை மற்றும் உதவி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, வகுப்பறையில் இருந்த கேமராக்களை வேறு ஒரு பகுதியில் மாற்றி வைத்தனர். ஆசிரியரின் பாலியல் தொந்தரவுகளுக்கு, அவர்களும் உடந்தையாக இருந்து செயல்பட்டனர்.

எனவே பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீதும், அவருக்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆசிரியர் ஜெயராம், தலைமை ஆசிரியை பொற்செல்வி, உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com