கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் 17-ந்தேதி வரை பொங்கல் சிறப்பு சந்தை
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் 17-ந்தேதி வரை பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுகிறது.;
சென்னை,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, அங்காடி நிர்வாகக் குழுவின் மூலமாக நடப்பாண்டிலும் பொங்கல் சிறப்பு சந்தையை இன்று (வியாழக்கிழமை) முதல் 17-ந்தேதி (சனிக்கிழமை) வரை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறப்பு சந்தைக்கான கரும்பு விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து ஆகியவை ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இச்சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலின்றி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்காடி நிர்வாகக் குழு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.