உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு

தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 30ல் உள்ள பகுதிகளுக்கு தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.;

Update:2025-09-10 20:10 IST

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் கே.எஸ்.ஆர். மாநகராட்சி மண்டபத்தில் இன்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்” பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட கலெக்டர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணையினை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3,768 முகாம்கள் கிராமப்புறங்களில் 6,232 முகாம்கள் என மொத்தம் 10,000 முகாம்கள் மூலம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும், நகர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக இந்த திட்டத்தினை சிதம்பரத்தில் துவக்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 55 வார்டுகளுக்கு 38 முகாம்களும், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் 69 வார்டுகளுக்கு 29 முகாம்களும், 17 பேரூராட்சிகளை சார்ந்த 273 வார்டுகளுக்கு 34 முகாம்களும், ஊராட்சி பகுதிகளுக்கு 154 முகாம்களும் என 255 முகாம்கள் 7.10.2025 வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில், மருத்துவத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய தினம் மேலப்பாளையம் மண்டலம் வார்டு எண் 31, 45, 46 பகுதிகளுக்கு கே.எஸ்ஆர். மாநகராட்சி மண்டபத்திலும், களக்காடு நகராட்சி வார்டு எண் 19, 21, 22 பகுதிகளுக்கு வியாசராஜபுரம் அருணா மஹாலிலும், சங்கர்நகர் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 6 வரையிலான பகுதிகளுக்கு சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்திலும், மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு எண் 9 முதல் 15 வரையிலான பகுதிகளுக்கு மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்திலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் களக்குடி, எட்டாங்குளம் பகுதிகளுக்கு களக்குடி யாதவர் சமுதாய நலக்கூடத்திலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கரைச்சுத்துப்புதூர் பகுதிகளுக்கு கரைச்சுத்துப்புதூர் சமுதாய நலக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாம்களில் உடனடியாக தீர்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மின்விநியோகம் பெயர் மாற்றம் போன்ற உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டு பலர் சேவைகள் பெற்று வருகின்றனர். மேலும் உடனடி தீர்வு காணாத மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நாளை (11.9.2025) தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 30 பகுதிகளுக்கு தச்சநல்லூர் மண்டல அலுவலகத்திலும், திருக்குறுங்குடி பேரூராட்சி வார்டு எண் 8 முதல் 15 வரையிலான பகுதிகளுக்கு திருக்குறுங்குடி சரஸ்வதி திருமண மண்டபத்திலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் தெற்குப்பட்டி, குறிச்சிகுளம் பகதிகளுக்கு குறிச்சிகுளம் பள்ளிவாசல் சமுதாய நலக்கூடத்திலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்குடி பகுதிகளுக்கு சேனைத்தலைவர் திருமண மண்டபத்திலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் முதுமொத்தான்மொழி பகுதிகளுக்கு முதுமொத்தான்மொழி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு கருங்குளம் பகுதிகளுக்கு தெற்கு கருங்குளம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெறவுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்