நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: 683 முகாம்கள் நடத்தப்பட்டு 10,58,286 பேர் பயன் - அமைச்சர் தகவல்
41,324 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (13.12.2025) சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா தனியார் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, இம்முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டம் 02.08.2025 அன்று சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம் கடந்த வாரம் வரை 11.12.2025 அன்று 5 முகாம் என்கின்ற வகையில் இதுவரை 683 முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 10,58,286 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், சென்னைக்கு அடுத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் என்கின்ற அளவிலும், தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாரங்களில் தலா 3 என்கின்ற வகையிலும் ஆக ஒட்டு மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு இதுவரை 683 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
இத்திட்டம் மக்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது. இன்று இந்த முகாம் 19வது வாரம் 20வது முறையாக தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்று ஆக மொத்தம் 728 முகாம்களாக நடைபெற்று வருகிறது. இம்முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் என்று இருந்ததை ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திட முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இரண்டு நாட்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிர் நல மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் போன்ற 17 வகையான மருத்துவ முறைகள் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முழு உடற்பரிசோதனைகளுக்கு ரூ.20,000/- வரை செலவாகும்.
அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/- வரை செலவாகும். ஆனால் கட்டணமின்றி இந்த முகாமில் முழு உடற்பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இன்னொன்று மிக முக்கியமான சேவையாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ஒவ்வொரு முகாமிற்கும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு முழு உடற்பரிசோதனை செய்யப்படுகிறது. அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய சேவை செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறை.
மேலும் இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் தரப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவர்களின் ஆலோசனை, மருத்துவர்களிடத்தில் அவர்களுக்கு எத்தனை சதவிகிதம் அளவிற்கு பாதிப்பு இருக்கின்றது என்று அறிந்து சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து வருவாய் அளவில் சான்றிதழ் பிறகுதான் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது. எனவே மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றுதான் இச்சான்றிதழ் பெறும் நிலை இருந்தது.
அந்தவகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அந்தந்த பகுதிகளிலேயே நடைபெறுகின்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நேரிடையாக வருகை புரிந்து அவர்களுடைய மாற்றுத்திறன் அளவினை மருத்துவர்களிடம் காண்பித்து அன்றைய நாளிலேயே சான்றிதழ்கள் பெறும் நிலையினை தந்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்றுள்ள 683 முகாம்கள் மூலம் 41,324 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இருந்தாலும் புதியதாக குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கும் காப்பீடு அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை நடைபெற்றுள்ள 683 முகாம்களில் 32,514 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் வரை 9 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை 21,438 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். இன்று 10வது முகாம்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முகாமில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை என்கின்ற வகையில் அவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் முழு உடற்பரிசோதனை செய்யப்படுகிறது. இது உலகளவில் எந்த நாட்டிலும், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒன்று. அதாவது வெளிமாநில தொழிலாளர்களுக்கு மொழி பாகுபாடு, இன பாகுபாடு, எல்லை பாகுபாடு எதையும் பாராமல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முழு உடற்பரிசோதனை செய்ய அறிவுறுத்தியிருக்கிறார்கள். இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 23,819 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத்தலைவர் பி.கே.மூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.