திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.;
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் கோர்ட்டு உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரித்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது, மனுதாரர் சிஆர்பிஎப் (மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப்படை) வீரர்கள் பாதுகாப்புடன் சென்று முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சென்ற மனுதாரர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் ஏற போலீசார் அனுமதி மறுத்தனர். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.