இந்தியாவிலேயே தனிக்காட்டு ராஜாவாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு, திராவிட மாடல் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது;
கல்வராயன் மலையின் கம்பீரமும், ஆன்மிகமும் நிறைந்த கள்ளக்குறிச்சியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. திராவிட மாடல் என்பது சாதனை திட்டங்கள் நிறைந்த அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுகின்றனர். மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களை கொடுத்து, மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு இது. தீயணைப்பு, மீட்பு நிலையம், உயர்மட்டப் பாலம், சாலைகள் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.
ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் நம்மை பார்த்து, பின்பற்றக்கூடிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3.18 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தாயுமானவன் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் திட்ட பயனாளிகளின் மகிழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்தேன். திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் கள்ளக்குறிச்சி பயன்பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சிக்கு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
* கல்வராயன் மலைப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் விடியல் திட்டம் மேம்படுத்தப்படும்
* சங்கராபுரம் அருகே ரூ.18.5 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்
* உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரியில் ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்
* ரிஷிவந்தியத்தில் ரூ.6.5 கோடியில் வானாவரம் புதிய ஊராட்சி அமைக்கப்படும்
* திருக்கோவிலூர் பகுதியில் ரூ.5 கோடியில் சேமிப்புக்கிடங்கு அமைக்கப்படும்.
* உளுந்தூர்பேட்டை, சேர்ந்தநாடு கிராமத்தில் சிப்காட் உருவாக்கப்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பட்டியலிட்டால் மூச்சுவாங்கும் அளவுக்கு சாதனைகள் செய்துள்ளோம். ஒன்றிய அரசின் தரவரிசைகளில் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்மதான். நெஞ்சை நிமிர்த்தி, காலரை உயர்த்தி தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இதில் 5% ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? மத்திய அரசின் தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். கிறிஸ்துமஸ் நாளிலும் மதவெறி தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பாஜவின் கண்களை உறுத்துகிறது. எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு வந்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள். இந்த ஸ்டாலினைத் தாண்டி நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திராவிட மாடல் அரசின் 2.0 தொடரும்.”
இவ்வாறு அவர் பேசினார்.