சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இது குறித்த அறிக்கை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாவட்ட கலெக்டர்களின் அறிக்கை பெற்ற பின், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.