பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.;

Update:2025-12-13 08:37 IST

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்கள் வழியாக துணை நீரேற்று நிலையம் மற்றும் பிரதான நீரேற்று நிலையம் மூலம் தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகர பகுதிகளில் சில நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இயந்திர குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேடு உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் முறைப்படுத்தி சரி செய்திட ஏதுவாக தூத்துக்குடி மாநகராட்சிக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண்- 18002030401 என்பதில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்சொன்ன தொலைபேசியில் தங்களது புகாரினை பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்