தென்காசி: விஷம் கொடுத்து பள்ளி ஆசிரியரை கொன்று புதைத்த பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரியாமல் இருப்பதற்காக, ஒரு பெண் கள்ளக்காதலனை தனது தம்பி, தந்தையுடன் சேர்ந்து திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து குழி தோண்டி புதைத்தனர்.;

Update:2025-11-12 18:58 IST

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரை பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை குழி தோண்டி புதைத்த பெண் மற்றும் அவரது தம்பி மற்றும் தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்தவர் சந்தோஷ் (வயது 36). இவர் பாவூர்சத்திரம்-சுரண்டை செல்லும் சாலையில் உள்ள ஒரு காம்பவுண்டில் மனைவி அனுஷாவுடன் குடியிருந்து வந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தவர் பொன்செல்வி. இவரது கணவர் முருகன் அபுதாபியில் போர்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷின் மனைவி அனுஷாவும் பக்கத்து வீட்டுக்காரரான பொன்செல்வியும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் சந்தோஷும் அடிக்கடி பொன்செல்வியுடன் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அதன்பின் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொன்செல்வி பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே.ஜி. சாலையில் அசிசி பள்ளிக்கு மேல்புறம் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியிருந்து வந்துள்ளார். அதன் பிறகும் சந்தோஷ், பொன்செல்வியின் கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில் சந்தோஷ், பொன்செல்வியிடம் நீ உன்னுடைய குழந்தைகளை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு, தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பொன்செல்வி வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் பொன்செல்விக்கும் சந்தோஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அபுதாபியில் உள்ள பொன்செல்வியின் கணவர் முருகன் ஊருக்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் கணவர் ஊருக்கு வரும் நேரத்தில் ஆசிரியர் சந்தோஷ் மூலமாக தனக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தனது கணவர் ஊருக்கு வருவதற்கு முன்பாக சந்தோஷை கொலை செய்து விட வேண்டும் என்று பொன்செல்வி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது உடன்பிறந்த தம்பி வெய்காலிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன்(34), தனது தந்தை தங்கப்பாண்டி(70) ஆகியோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து ஆசிரியர் சந்தோஷை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சந்தோஷை பொன்செல்வியின் வீட்டிற்கு வரவழைத்து பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 4.2.2016 அன்று தனது வீட்டுக்கு பின்புறம் வேலை ஆட்கள் மூலமாக ஒரு குழி தோண்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 6.2.2016 அன்று காலையில் பொன்செல்வியின் தம்பி முருகன் மற்றும் அவரது தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் சந்தோஷுக்கு கொடுப்பதற்காக பிராந்தி, கோழிக்கறி மற்றும் மோனோசில் என்ற விஷ மருந்தையும் வாங்கி வந்து பொன்செல்வியிடம் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொன்செல்வி செல்போன் மூலம் சந்தோஷை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே. சாமில் அருகில் நின்று கொண்டிருந்த சந்தோஷை தனது காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பொன்செல்வியின் தம்பி முருகன் தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் பொன் செல்வியின் வீட்டில் உள்ள மற்றொரு படுக்கை அறையில் மறைந்து இருந்துள்ளனர்.

அதன்பின் பிற்பகல் 12.30 மணிக்கு பொன்செல்வி ஏற்கனவே திட்டமிட்டபடி ஆசிரியர் சந்தோஷிற்கு விஷம் கலந்த பிராந்தி மற்றும் கோழிக்கறியையும் கொடுத்து சாப்பிடும்படி கூறியுள்ளார். இதுகுறித்து எதுவும் அறியாத சந்தோஷ் விஷம் கலந்த பிராந்தியை குடித்துவிட்டு கோழிக்கறியையும் தின்றுள்ளார். இதனால் சற்று நேரத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் அவரை பொன்செல்வி அந்த அறையிலேயே வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார்.

அதன்பிறகு மாலை 3 மணி அளவில் பொன்செல்வி கதவை திறந்து பார்த்தபோது சந்தோஷ் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொன்செல்வி அவரது தம்பி முருகன் இவர்களது தந்தை தங்கப்பாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆசிரியர் சந்தோஷின் உடலை ஏற்கனவே தோண்டி வைத்த குழியில் போட்டு மூடி உள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர் சந்தோஷை காணவில்லை என்று அவரது மனைவி அனுஷா பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் சந்தோஷிற்கும், பொன்செல்விக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் பொன்செல்வியை பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்திய போது, நடந்த உண்மைகள் அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் பொன்செல்வி அவரது தம்பி முருகன் இவர்களது தந்தை தங்கப்பாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷை பொன்செல்வி, முருகன், தங்கப்பாண்டி ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்து அதனை மறைக்கும் வகையில் சந்தோஷின் உடலை குழி தோண்டி புதைத்துள்ளதும் நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி மனோஜ்குமார் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது முதல் குற்றவாளியான பொன்செல்வி, 2-வது குற்றவாளியான முருகன், 3-வது குற்றவாளியான தங்கப்பாண்டி ஆகியோர் செய்த கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும், மேலும் தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும், மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்