சந்திரகாச்சி - தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று தொடக்கம்
அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.;
சென்னை,
இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது. அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.
தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி, தாம்பரம் - சந்திரகாச்சி இடையே அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் ஜல்பாய்குரி - திருச்சி மற்றும் ஜல்பாய்குரி- நாகர்கோவில் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், சந்திரகாச்சி - தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று தொடங்குகிறது. இது குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06108) (இன்று) 18ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். சந்திரகாச்சி - தாம்பரம் இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.