சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக அரசு விளங்கி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இயேசு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரின் மனிதநேயம், இரக்கம் மற்றும் சமத்துவம். அனைவருக்கும், குறிப்பாக எளியவர்களுக்கு உடனடியாக உதவுவது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும் நம் திராவிடக் கொள்கைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது.
சிறுபான்மையின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியை வழங்கி வருகிறார். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நம்முடைய திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கிறார். இப்படி நம் அரசும், முதல்-அமைச்சரும் கொண்டு வரும் திட்டங்களால்தான் இன்று 11.19 சதவிகித பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி, இஸ்லாமியர்களுக்குக் கொடுப்போம். ரம்ஜான் அன்று எங்களுடைய வீட்டிற்குப் பிரியாணி வரவில்லை என்றால், உரிமையோடு கேட்போம். பொங்கல் அன்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து சமமாகப் பொங்கலைக் கொண்டாடுவோம். இதுதான் தமிழ்நாட்டின் பெருமை.
இன்று சங்கிகள் தமிழ்நாட்டுக்கு பல்வேறு பிரச்சினைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு யார் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். பழைய அடிமைகளோடு சேர்த்து இன்று புதிய அடிமைகளும் சேர்வார்களா என்று அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் தமிழ்நாட்டு மக்களோடும்‘வெற்றிக் கூட்டணி’யோடும் இருக்கிறோம்.
இது வெறும் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி கிடையாது. இது ஒரு கொள்கைக் கூட்டணி. அதனால்தான் கடந்த 11 தேர்தல்களாக தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை மட்டுமே நம்முடைய தலைவருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்தத் திராவிட மாடல் அரசு தொடர, நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
"வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு" என்று 200 தொகுதிகளை இலக்காகத் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கிறார். 200 மட்டுமல்ல, அதற்கும் அதிகமான தொகுதிகளில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். அதற்குத் தொடக்கமாக இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.