பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தம், கோதகுமார், கோபிநாதன் ஆகிய 3 பேர் மட்டும் நேரில் ஆஜராகினர். பொன்முடி எம்.எல்.ஏ., பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை.
மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் தரப்பில் 9 சாட்சிகளிடம் விசாரணை செய்ய அனுமதி கேட்டு அவர்களது பெயர் பட்டியலுடன் ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்தனர். அதன்படி நேற்று தற்போது விழுப்புரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வரும் வசந்தகிருஷ்ணன் (தாசில்தார் நிலை) ஆஜரானார்.
அவரிடம் இவ்வழக்கு தொடர்பாக பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோர் தரப்பு வக்கீல்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிந்ததும் அரசு தரப்பு வக்கீல் கார்த்திகேயன் குறுக்கு விசாரணை செய்தார். இதன் விவரத்தை மாவட்ட நீதிபதி மணிமொழி பதிவு செய்தார். தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மற்ற சாட்சிகளை விசாரிப்பதற்காக இவ்வழக்கின் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.