விக்ரமராஜா தலைமையில் தேனியில் நாளை மறுதினம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்
நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.;
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் நாளை மறுதினம் (18.12.2025 - வியாழக்கிழமை) தேனியில் நடைபெற உள்ளது. தேனி வீரபாண்டி, ஜானகி முத்தையா மகாலில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தலைமையில் இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்க்குழு கூட்டம் தொடர்பாக பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா கூறுகையில்,
2026&ஆம் ஆண்டை பொருத்தவரை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் ஆண்டாக உள்ளது. வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டு, பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
வணிகர்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அதனை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் பொதுக்குழு கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.
வணிகர்கள் அரசின் முதுகெலும்பு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், வணிகர்களின் கோரிக்கைகள் முழுமையாக மத்திய மாநில அரசுகளால் நிறைவேற்றப்படாத சூழலில், காலநேரம் பாராது உழைக்கின்ற வணிகர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் கிடைத்திட வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு மூலம் அரசிற்கு அழுத்தம் கொடுத்து, பேரமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
என்றார்.