

திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் அன்பு(எ) அன்பழகன் (வயது 30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் பாட்டி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு(எ) அன்பழகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி உமா மகேஸ்வரி குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்பு(எ) அன்பழகனுக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் அன்பழகனை புழல் சிறையில் அடைத்தனர்.