தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 29.1.2017 அன்று சக்கம்மாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வைணவப்பெருமாள் மகன் பாலமுருகன் (வயது 38) என்பவரை, ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில், ஏரல் சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த வேதமாணிக்கம் மகன் யோகராஜ்(51) மற்றும் வள்ளியூரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் சுடலைமணி(52) ஆகிய 2 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று (8.9.2025) குற்றவாளிகளான யோகராஜ் மற்றும் சுடலைமணி ஆகிய 2 பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்த், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல்ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அரவிந்த் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.