விபத்தை தவிர்க்க பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்: தூத்துக்குடி போலீசார் வழங்கினர்
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு எப்போதும்வென்றான் போலீசார், ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினர்.;
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக சென்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் தற்போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்த பாதயாத்திரை பக்தர்கள் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை மார்க்கமாக கோவிலுக்கு செல்கின்றனர். இந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் இந்த சாலையோரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் செல்கின்றனர். கடந்த காலங்களில் சாலையோரங்களில் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் விபத்துகளில் சிக்கி வந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க போலீசார் ஒலிபெருக்கி மூலம் நான்கு வழிச்சாலையில் அறிவுறுத்தி வருகின்றனர். நேற்று எப்போதும்வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீசார் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினர்.