தூத்துக்குடி தெப்பக்குளம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update:2025-12-12 20:16 IST

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன்கோவில், முத்தாரம்மன் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சுந்தரவிநாயகர் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் நிறைந்த பகுதியில் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஓரு முறை தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

கடந்த 24 ஆண்டு காலமாக சீரமைப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மாநகராட்சி சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் தெப்பத்தில் உள்ள நீரை முழுமையாக வெளியேற்றி சில பணிகளை மேற்கொண்டதால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் சுமார் 6 அடி வரை திடீரென கீழே இறங்கி விரிசல் ஏற்பட்டது.

அதனால் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பாரம் சரிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதற்காக தெப்பக்குளத்தை சுற்றி கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் அமர்வதற்கு வசதியான பெஞ்சுகள் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள மீன்களை பராமரிக்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக தெப்பக்குளத்தில் இருந்து அசுத்த நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் புதன் இரவு திடீரென தெப்பக்குளத்தின் தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கிரானைட் கற்கள் உள்ள பகுதியில் திடீரென சுமார் 6 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டு கிரானைட் உடைந்து தெப்பக்குள சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. மேலும் தெப்பக்குளம் அருகே இருந்த இரண்டு மின் மாற்றிகளும் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவில் உடனடியாக வந்து ஆய்வு செய்தேன்.

அந்தப் பகுதிக்கு தீயணைப்புத் துறை வீரர்களை வரவழைத்து பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டோம், தெப்பக்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக தெப்பக்குளம் சுவர்கள் இடிந்து விழும் சூழ்நிலை உள்ளது. அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஆய்வுக்கு பின்பு பழமை மாறாமல் தெப்பக்குளம் முறையாக சீரமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மின்வாரிய உதவி பொறியாளார் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ப்ரித்திகா, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் சீலன்ஸ்ருதி உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்