தூத்துக்குடி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
தூத்துக்குடியில் ஒரு வாலிபர், நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்தபோது, மாடி சுவரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.;
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-2 குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா கார்த்திக் (வயது 23). பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 24-ம் தேதி இரவு நடந்த கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்தை பார்த்துவிட்டு, தனது நண்பரான சுப்பையாபுரத்தை சேர்ந்த கிரி என்பருடன் நள்ளிரவு அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
அப்போது 2 பேரும் அவரது வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது மாடி சுவரில் அமர்ந்திருந்த ராஜா கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.