வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்தல் கமிஷன்

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை ஆகும்.;

Update:2025-12-10 18:22 IST

சென்னை,

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் கணக்கீட்டு காலம் நாளையுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியலானது சிறப்புத் தீவிர திருத்தப்பணி கால அட்ட வணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான வருகிற 16-ந்தேதி அன்று வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 27.10.2025 அன்று அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்றனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழக்கமான அடிப்படையில் பகிரப்பட்டு வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூ ட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், முகவரியில் குறிப்பிட்ட இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்தப் பட்டியல் நாளை கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்யப்படும். எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்களது நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல், விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முழுமையான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பினை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை ஆகும். இந்தக் காலப்ப குதியில் பெயர் வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்ற வரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்