மூடி இருந்த கேட்டை கடந்தபோது பைக் மீது மோதிய ரெயில்.. ராமநாதபுரம் அருகே பரபரப்பு

ரெயில் என்ஜின் அடியில் சிக்கிய பைக், சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது.;

Update:2025-12-11 01:32 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உச்சிப்புளி அருகே வந்தது. இதற்காக புதுமடம் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் வாலிபர் ஒருவர், மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். ரெயில்வே கேட் மூடி இருந்தும், அதை கடந்து செல்ல முயன்றார். தண்டவாளத்தின் நடுப்பகுதியில் அவர் சென்றபோது ரெயில் வேகமாக வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் உடனடியாக அவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார். தண்டவாளத்தில் கிடந்த மோட்டார்சைக்கிள் மீது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக மோதியது.

மேலும் மோட்டார்சைக்கிள் சேதம் அடைந்து, ரெயில் என்ஜின் அடியில் சிக்கியது. சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது. இதைப் பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்தார். பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரெயிலுக்கு அடியில் சிக்கிய மோட்டார்சைக்கிளை வெளியே கொண்டு வந்தார்.

மேலும் இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில் அங்கிருந்து சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. நல்லவேளையாக மோட்டர்சைக்கிள் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடிக்கவில்லை. மோட்டார்சைக்கிளை தண்டவாளத்தில் போட்டுவிட்டு ஓடிய வாலிபர் யார்? என்பது குறித்து ராமநாதபுரம் ெரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்