விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஸ்தம்பித்த ரெயில் நிலையங்கள்
தொடர் விடுமுறை வந்ததால், தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.;
சென்னை,
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 15- தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் மாட்டுப் பொங்கலும், நேற்று காணும் பொங்கலும் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் சிலர் அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும், தங்களது சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.
இந்த சூழலில் தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் இன்று முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ரெயில் நிலையங்கள் ஸ்தம்பித்து வருகிறது. இதன்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் மக்களால் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.