டிரையத்லான் விளையாட்டு போட்டி: கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்- செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிரையத்லான் என்ற விளையாட்டு போட்டி வரும் 11-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.;
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிரையத்லான் என்ற விளையாட்டு போட்டி வரும் 11-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை (10-ம் தேதி) இரவு 11 மணி முதல் 11ம் தேதி மதியம் 2 மணி வரை, சென்னை- புதுச்சேரி மார்க்கமாக உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை NH-332-A கோவளம் சந்திப்பிலிருந்து சூளேரிக்காடு (நெம்மேலி) வரை போக்குவரத்திற்காக முழுவதுமாக மூடப்படும். மேலும் இவ்வழி தடத்திலேயே போட்டியானது இருவழி பாதையாக நடத்தப்பட உள்ளது. எனவே புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும், பூஞ்சேரி ஆலத்தூர் பைபாஸ் (OMR) கேளம்பாக்கம்- சென்னை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.