61 விரைவு பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
எஸ்.இ.டி.சி சார்பில் முதற்கட்டமாக ரூ.38 கோடி மதிப்பீட்டில் 31 இருக்கை, 15 படுக்கை வசதிகளுடன் கூடிய 61 பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் வகையில் புதிய அதிநவீன சொகுசு பேருந்துகள், மின்சார பேருந்துகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார பேருந்துகள் என தொடர்ந்து போக்குவரத்து சேவை மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தி வருகின்றார்.
அதனடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு அதி நவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பொதுமக்களுக்கும், பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான முதன்மைத் தேர்வாக விளங்கி வருகின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 24.12.2025 அன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதியானது அதிகரிக்கப்பட்ட இடத்துடன் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது. நடத்துனர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி (Micro Phone), டிஜிட்டல் கடிகராம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காக போதிய இடவசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்துகளின் Engine என்ஜின் அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் (EMR) நிறுவப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானிக்கும் தீ கட்டுபாட்டு அமைப்பு (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் இன்று (6.1.2026) அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்மோகன், மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் சுந்தரபாண்டியன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.