பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது.
அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7ஆவது “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை – 2023” போட்டி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான உலக சர்பிங் லீக் போட்டி, HCL சைக்ளோத்தான் (CYCLOTHON) போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ”சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025” என பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சென்னை மற்றும் மதுரையில் ஹாக்கி ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை தமிழ்நாடு - 2025 போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2026 போட்டி (SDAT INDIA INTERNATIONAL YOUTH SAILING CHAMPIONSHIP IIR) சென்னை துறைமுகத்தில் 6.1.2026 முதல் 9.1.2026 வரை பல்வேறு வகையிலான பாய்மர படகுப்போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, சீசெல்ஸ், மொரிசியஸ், மலேசியா, அயர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 12 வயது முதல் 18 வயது வரையிலான 87 படகோட்டும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் இந்திய அணி 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. அயர்லாந்து 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்களையும், மலேசியா 1 வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.
இதுவரை பாய்மரப் படகுப்போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து ரசித்த சென்னை மக்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இந்த போட்டி நீங்காத நினைவுகளை அளித்தது.
இப்போட்டியில் தமிழ்நாட்டு வீரர் கிருஷ்ணா வெங்கடாசலம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை நேத்ரா, வீரர்கள் வருண் மற்றும் கணபதி ஆகிய மூன்று பேரும் Olympics Sailing போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்கள்.
இவர்கள் மூவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.1.2026) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல் பரமேஷ் சிவமணி, தமிழ்நாடு பாய்மர படகு சங்கத்தின் துணைத் தலைவர் அசோக் தாக்கர் உள்பட பாய்மரப் படகு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.