புதுச்சேரியில் பேசிய விஜய்.. டீக்கடையில் அமர்ந்து செல்போனில் ரசித்து கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.;
புதுச்சேரி,
தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகையில், “ மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான். நாம் பார்க்கும்போது பாச உணர்வு, அதுமட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான்.
பாரதியார் இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண்.1977-ல் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974-ல் புதுச்சேரியில் அவரது ஆட்சி அமைந்தது. அவர்கள்தான் அலெட் செய்தனர். புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாக தாங்கி பிடிக்கிறீர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்.
தமிழக அரசு போல் புதுச்சேரி அரசு கிடையாது. நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர். புதுச்சேரி முதல்-மந்திரிக்கு நன்றி. இதைப் பார்த்து தமிழக முதல்-அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரி அரசை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அரசாக மாற்ற தீர்மானம் போட்டு அனுப்பினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மூடிய மில்களை திறக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. காரைக்கால் மாஹி, ஏனம் பகுதியில் முன்னேற்றமே இல்லை.
புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் ரெயில் திட்டம் வேண்டும். புதுச்சேரி மக்களிடம் சொல்கிறேன். தி.மு.க.வை நம்பாதீங்க. நம்பவைத்து ஏமாற்றுவார்கள். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி இடம்பெறவில்லை. அதனால், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வெளியே கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது. தொழில் வளர்ச்சியும் வேண்டும். இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் ரேசன் கடைகளை தொடங்கி மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனை ஆரோவில் பகுதியில் டீக்கடையில் அமர்ந்து கொண்டிருந்த புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது மொபைல் போனில் கேட்டு ரசித்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.