ஜனநாயக உரிமையைக் காக்கும் வாக்காளர் திருத்தப் பணி: திமுக எதற்காக பதறுகிறது ? நயினார் நாகேந்திரன்
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளை நேர்மையான வழியில் செய்து முடிக்க திமுக அரசு ஒத்துழைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .;
சென்னை ,
தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
வாய்க்கு வந்த காரணங்களைக் கூறி தமிழகத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க மறுத்ததோடு மட்டுமன்றி SIR பணிகளைத் தொடரவும் அனுமதியளித்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
போலி வாக்காளர்களைக் கண்டறிந்து பொதுமக்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும் SIR-ஐ திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதற்காகக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றன என்பதும், நேர்மையான முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் திமுக எதற்காக பதறுகிறது என்பதும் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இருப்பினும் தேசத்தின் நலனுக்காகவும் தேச மக்களின் வாக்குரிமையைக் காக்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட SIR-க்கு முழு அனுமதியளித்து நீதியை நிலைநாட்டியுள்ளது மாண்பமை உச்சநீதிமன்றம்.
எனவே, இனியாவது எவ்வித குளறுபடிகளுமின்றி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளை நேர்மையான வழியில் செய்து முடிக்க திமுக அரசு ஒத்துழைக்க வேண்டும்.என தெரிவித்துள்ளார் .