தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது
வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.;
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்படைந்துள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை எல்லாம் திரைக்கு பின்னால் நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தகுதியான வாக்காளர்களை மட்டும் ஓட்டுப் போடச் செய்யும் நடவடிக்கையாக வாக்காளர்கள் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. அப்போதுதான் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவரும். சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தலின்போது வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.) சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியுள்ளது. வரும் 24-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பணிகளின்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 1½ லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பணிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்.