மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.;
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 7-ந் தேதி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் பாசனப்பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
கால்வாய் பாசன தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 142 கனஅடியாக இருந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் 98.48 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 98.04 அடியாக குறைந்தது. தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து குறைவாகவே இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.