புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-12-11 12:17 IST

கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11-ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று! நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.

பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம். பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில், பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்