இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம். நல்ல முடிவு எடுப்போம்.-அமைச்சர் அன்பில் மகேஸ்

துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் அதற்கு நல்ல விடிவை கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது என்று அன்பில் மகேஸ் கூறினார்.;

Update:2026-01-03 10:13 IST

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நேற்று திருச்சியில் இருந்து விமானத்தில் வரும்போது கூட முதல்வர் இதுபற்றி கேட்டார். ஓய்வூதியம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறுக்றது. அந்த கமிட்டி கூட்டம் முடிந்தவுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.

இடைநிலை ஆசிரியர்கள் பற்றி பேசும்போது நிதித்துறை சில கருத்துகளை என்னிடம் சொல்லியுள்ளனர். அதை தெளிவுபடுத்தும் வகையில் இன்றைக்கு நாங்கள் சில கோரிக்கைகளை வைக்கவுள்ளோம். ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் என்னிடம் என்ன அறிவுறுத்துகிறாரோ அதை நிதி குழுவில் சொல்லி நல்ல முடிவு எடுக்கப்படும். நாங்கள் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை.

பொதுவாக ஊதியக் குழுவில் உயர்வு இருக்கும். பணி நியமனம் தொடர்பாக, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் சொன்ன சம்பளம் ஒன்றாகவும், நியமனத்துக்கு பிறகு பெறும் சம்பளம் ஒன்றாகவும் இருக்கும். அந்த வித்தியாசத்தை சரி செய்ய சொல்லி கேட்கிறார்கள். அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லியுள்ளோம். இது என்துறை சார்ந்த பிரச்சனை. துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் அதற்கு நல்ல விடிவை கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. பொறுமையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம். போராடும் ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். ஆசிரியர்களை கைவிட மாட்டோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்