வார விடுமுறை: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.;
தென்காசி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
மேலும் குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டு வருகின்றனர். தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் அருவிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.