திமுக கூட்டணிக்கு சென்றது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்
ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.;
சென்னை,
கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு படத்திறப்பு நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது;
“முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் தொண்டுகள் செய்து, அரசியலில் இருந்த மூத்தவர்களிடமும், மூத்த கட்சிகளிடமும் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர்தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது கூடி நின்றாக வேண்டும்.
ரிமோட்டை தூக்கிப்போட்டீர்களே.. டிவிய உடைத்தீர்ககளே.. எதற்காக திமுகவில் சேர்ந்தீர்கள் என்று கேட்கிறார்கள். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு. ஏன் மறுபடி திமுகவிற்கு போனீர்கள் என்றால், ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான். அப்படியாக, ரிமோட் அங்கு போகக்கூடாது. ரிமோட் மாநிலத்தில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ரிமோட்டை கொடுப்போமா நாங்கள், எடுத்துட்டு வா திருப்பி ஒளித்து வைத்துக் கொள்வோம்.
ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது வந்து எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்தக் கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள். ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்த தொல்லைகள் இருந்தே தீரும். அது வேண்டாம் என்று நினைத்தால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம். இந்த அரசியல் செய்தி போதுமானது."
இவ்வாறு அவர் கூறினார்.