மருமகளை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? - கைதான மாமியார் பரபரப்பு வாக்குமூலம்
மாமியார்-மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தொழிலாளியான இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த நந்தினி(வயது 29) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா தற்கொலை செய்து கொண்டார்.
தனிமையில் வசித்து வந்த நந்தினி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விரியூரை சேர்ந்த சாலமோன் மகன் பிசியோதெரபிஸ்ட்டான மரிய ரொசாரியோ(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு(55) பிடிக்காததால் அடிக்கடி மாமியார்-மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி கிறிஸ்தோப்மேரி, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க கோவிலில் மாந்திரீகம் செய்வதாக கூறி நந்தினியை அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்தோப்மேரி மற்றும் அவரது தோழி எமிலி(52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கிறிஸ்தோப்மேரி போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நானும், எனது மகனும் ஊரில் நல்ல வசதியுடனும், மரியாதையுடனும் வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மகனை 2-வதாக திருமணம் செய்து எங்கள் குடும்பத்தை சீர்குலைத்த நந்தினியை கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். பின்னர், எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினேன்.
பல மாதங்களாக நந்தினியை கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். இதனால் கடந்த 4 மாதமாக எனது மருமகள் நந்தினியிடம் நன்றாக பழகினேன். இதுகுறித்து எனது தோழியான எமிலியிடம் தொிவித்தேன். அதற்கு எமிலி, உனது மருமகளை மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்து வா என்றும், அங்கு வைத்து அவரை கொலை செய்துவிடலாம் என்றும் கூறினார்.
அந்த திட்டத்தின்படி 29-ந்தேதி அதிகாலை நந்தினியை அழைத்து கொண்டு நானும் எனது தோழி எமிலியும் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு மணிமுக்தாற்றின் கரையோரம் சென்றோம். அங்கே பூஜை செய்யும்போது கண்ணை மூடிக்கொள் என்று கூறி, நந்தியின் கையில் எலுமிச்சை பழத்தை கொடுத்தேன். எமிலி பூஜை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் நான் பின்பக்கமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன். பின்னர், நந்தினியின் தலைமுடியை பிடித்து இழுத்து அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தலையை தனியாகவும், உடலை தனியாகவும் ஆற்றங்கரையில் புதைத்துவிட்டு நானும், எமிலியும் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்றுவிட்டோம். எனது மகன் போலீசில் புகார் கொடுத்ததால் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.