கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், அவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.;
கோபிசெட்டிபாளையம்,
கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிமுக வெற்றி பெற வேண்டும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். இதன்மூலம் மட்டுமே புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் கனவை நனவாக்க முடியும். இதை பேசியதற்காக எனது கட்சி பதவிகளை பறித்து கொண்டார்கள். கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்த போது 2009ஆம் ஆண்டு இன்றைய பொதுச் செயலாளர் அவர்களை கழகத்தின் அனைத்து பணிகளில் இருந்து விலக்கினார்கள்.
2012ல் என்னையும் கழகப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதன்பிறகு எங்களை அரவணைத்து சென்ற வரலாறு இருக்கிறது. தற்போது அது போன்ற சூழல் இல்லை. என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி, ஏன், கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. என்னை பி டீம் என்றார்கள். உண்மையில் யார் பி டீம் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக அமர்த்தவில்லை. அவரை 2009ஆம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்-அமைச்சராக ஆகி இருக்க முடியாது. ஜெயலலிதா இருக்கும் போதும், அதன்பிறகும் மூன்று முறை ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மட்டும் தான் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். இவரை ஏன் அமர வைக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.
ஏனெனில் இவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று கூறியிருக்கிறார். எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், இவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது. எனவே கொல்லைப்புறம் வழியாக முதல்-அமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எனச் சொல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. பழைய விஷயங்களை கிளற ஆரம்பித்தால் நிறைய இருக்கின்றன. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவன் நான் அல்ல.
என்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியதே பாஜகதான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை, எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாக பேசினார். கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் எடப்பாடி. அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார்.
அதிமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் தான் அமர்ந்திருந்தேன். ஒருமுறை கூட என்ன குறை என்று அவர் கேட்டதில்லை.
ஒருங்கிணைப்பு பற்றி பேசும்போது என்ன வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி கூறினார் என எனக்குதான் தெரியும். குடும்பத்தில் சண்டை நடந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்ததே இல்லையா? அதெல்லாம் இயல்புதான்.
பெரிய கட்சியின் கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போடப்பட்டது என எடப்பாடி பழனிசாமி பேசினார். தற்போது அது என்ன ஆனது என உங்களுக்கு தெரியும். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலே நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என கனவு கண்டால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் 14 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.