கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மனைவி... ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர செயல்
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.;
சென்னை,
திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை சொந்த ஊர் செல்வதற்காக ராஜா, போரூர் சுங்கச்சாவடி பஸ் நிறுத்தத்தில் மனைவிக்காக காத்திருந்தார்.
அப்போது அவரது மனைவி சுலோச்சனா, தனது கள்ளக்காதலன் வேதநாயகத்துடன் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சுலோச்சனாவுடன் வந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள், ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவரும் காயம் அடைந்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.