2026 தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டி - ஜெயக்குமார் உறுதி
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும் என ஜெயக்குமார் கூறினார்.;
சென்னை,
அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளே பெரும் எழுச்சியை பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பார்க்கையில் ஒரு மகத்தான வெற்றியை பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சிகளைப் போலவும் பாஜகவும் அதிக சீட்தான் கேட்கும். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும்.
மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. 25 வருடம் வெற்றியைக் கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள். எனக்கு எப்போதும் ராயபுரம்தான். வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக்கும் மாறவில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன். பிரிந்து சென்றவர்களை இணைப்பதைப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது. தலைமைதான் கூற வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.