

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நாபளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சொர்ணலதா (58 வயது). இவர் நேற்று புரட்டாசி மாத கிருத்திகை தினத்தை ஒட்டி வீட்டில் சாமி கும்பிட்டு வீட்டில் படையல் போடுவதற்காக விவசாய நிலத்தில் உள்ள வாழை மரத்தில் இலை அறுக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறிய சொர்ணலதா, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.