தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்
காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.;
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்து தேர்வில் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2025-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான பொதுத்தேர்வு இன்று (9.11.2025) நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் ஆண் விண்ணப்பதாரர்களும், புனித மரியன்னை கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 2 தேர்வு மையங்களில் பெண் விண்ணப்பதார்களும் என மொத்தம் 7,556 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
மேற்சொன்ன தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்:
தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கருப்பு நிற பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் காலை 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ப்ளுடூத் போன்ற எல்க்ட்ரானிக் கருவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மேற்சொன்ன தேர்விற்கான விதிமுறைகளை விண்ணப்பதாரர்கள் கடைபிடித்து தேர்வு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.