தூத்துக்குடியில் அரை கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது: அரிவாள் பறிமுதல்
தூத்துக்குடியில் முள்ளக்காடு, சாமிநகர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.;
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், தனிப்பிரிவு காவலர் ஜாண்சன், தலைமை காவலர்கள் முத்துமணி, திரவியரத்தினராஜ், சமியுல்லா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முள்ளக்காடு, சாமிநகர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முள்ளக்காடு சாமிநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சின்னராசு (வயது 30) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாளை பறிமுதல் செய்தனர்.