வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை

சாத்தான்குளத்தில் மதுபான கூடத்தில் ஏற்பட்ட தகராறில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.;

Update:2025-12-24 15:23 IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், காந்திநகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (வயது 27). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், மற்றொரு சமூகத்தை சேர்ந்த சுந்தர், ஜெகதீஷ் ஆகியோரால் மதுபான கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் கடந்த டிசம்பர் 19ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் (NCSC) சென்னை மண்டல இயக்குநர் டாக்டர் எஸ்.ரவிவர்மன் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட பண நிவாரணத்தைத் தவிர, மாதாந்திர ஓய்வூதியம், வீடு வழங்குதல், அரசு வேலைவாய்ப்பு மற்றும் குடும்பத்திற்குப் பாதுகாப்பு போன்ற அனைத்து மறுவாழ்வு நடவடிக்கைகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கள விசாரணையின்போது ஆராய்ச்சி அதிகாரிகள் லிஸ்டர், சுரேஷ் ஆகியோர் அவருடன் சென்றனர்.

பின்னர் அதே பகுதியில் இருந்த ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பெனிட்டா ஆசீர், போலீஸ் ஏ.டி.எஸ்.பி. திபு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பன், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கணேஷ்குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளர் அகஸ்டின், கிராம நிர்வாக அலுவலர் மதுமிதா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்