தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் - ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு

சேலம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரெயிலில் அடிபட்டு, உடல் துண்டாகி பலியானார்.;

Update:2026-01-18 04:34 IST

கோப்புப்படம் 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தனுஷ் (18 வயது). இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள தண்டவாள பகுதியில் தனுஷ் ரெயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், தனுசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனுசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று தனுஷ் மதுபாட்டில் வாங்கி சென்று தண்டவாளத்தில் அமர்ந்து அருந்தி உள்ளார். அப்போது அவர் அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் உடல் துண்டாகி பலியானது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்