21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் வங்காளதேசம் கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்காளதேசம் கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க கூடும். தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.