கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.;
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரள பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.