ஜப்பான்: 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - 2 பேர் பலி
விபத்தில் 26 பேர் படுகாயமடைந்தனர்.;
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் கன்மா மாகாணத்தில் கன், எட்சு நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மினஹமி பகுதியில் நேற்று இரவு தொடர் விபத்து ஏற்பட்டது.
கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழ்நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் 2 லாரிகள் ஒன்றன்மீது ஒன்று மோதின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடும் பனிப்பொழிவு, இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. மொத்தம் 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.