வங்காளதேசம்: இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்து கொன்ற மாணவர் தலைவர் கைது
ஹசனை, இந்து அதிகாரி சவுத்ரி கொலைக்காக கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர்.;
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரி வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.
இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹசீனா இந்தியாவுக்கு தப்பிய அதே நாளில், ஹபிகஞ்ச் மாவட்டத்தில், பனியாசாங் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் பாபு சவுத்ரி, கும்பல் ஒன்றால் தீ வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், மாணவர் தலைவரான மஹ்தி ஹசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சவுத்ரியை கொலை செய்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளார்.
அவரை தீ வைத்து எரித்து கொலை செய்தேன் என வெளிப்படையாகவே ஹசன் கூறிய நிலையில், வங்காளதேசத்தின் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். எனினும், போலீசார் கூறும்போது ஹசனை, இந்து அதிகாரி சவுத்ரி கொலைக்காக கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.
இதனால் யூனுஸ் அரசு, 2024-ம் ஆண்டு படுகொலையில் தொடர்புடையவர்களை பாதுகாப்பது என்ற முடிவை வெளிப்படுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல் நிலையத்தின் மீது தீ வைத்து எரித்து விடுவோம் என ஹசன் வீடியோவில் மிரட்டுவதும் வெளியாகி உள்ளது. சம்பவத்திற்கு பின்னர், இந்து அதிகாரி எஸ்.ஐ. சந்தோஷை நாங்கள் எரித்து விட்டோம் என கொலை செய்த விசயங்களை ஹசன் வெளிப்படையாக கூறுவதும் வெளியாகி உள்ளது.