போராட்டக்காரர்கள் சரணடைய 3 நாட்கள் ஈரான் அரசு கெடு
ஈரானில் நடந்த போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிட்டதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.;
தெக்ரான்,
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ந்தேதி முதல் போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்று ஈரான் அரசு கெடும், விதித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் காவல்துறைத் தலைவர் அகமது ரெசா ரடான் கூறியதாவது:- கலவரங்களில் அறியாமலேயே ஈடுபட்ட இளைஞர்கள் எதிரிகளாக கருதப்பட மாட்டார்கள். ஏமாற்றப்பட்ட நபர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுடன் அரசு கருணையுடன் நடந்து கொள்ளும்.
போராட்டங்களில் கலந்துகொள்ளும்படி ஏமாற்றப்பட்ட நபர்கள் சரணடைந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். அவர்கள் சரணடைய கால அவகாசம் உள்ளது என்றார். ஈரானில் நடந்த போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிட்டதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.