ஈரானில் நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் கைது
பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக நர்கெஸ் முகமதிக்கு நோபல் பரிசு கிடைத்தது.;
டெஹ்ரான்,
ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி (வயது 53). இவர் மீது அங்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதுவரை 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ள அவர் 36 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக 2023-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இதனையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் மனித உரிமை ஆர்வலரும், வக்கீலுமான கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மஷ்ஹத் நகருக்கு நர்கெஸ் சென்றிருந்தார். அங்கு மற்ற மனித உரிமை ஆர்வலர்களுடன் அவரையும் போலீசார் கைது செய்தனர். ஈரானின் இந்த நடவடிக்கைக்கு நார்வே நோபல் பரிசுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.