ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.;
Image Courtesy : ANI
அம்மான்,
4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான் சென்றுள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், தற்போது ஜோர்டான் விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாளை எத்தியோப்பியா செல்கிறார்.
எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அங்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து ஓமன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கை சந்திக்கிறார். அந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.